Monday, 29 June 2026

தொல்லையற்ற தொலைதூரப் பயணம்

 


ஆனந்த அழுகையோடு பிறந்து அன்பு அரவணைப்போடு வளர்ந்து
எண்ணற்ற இடர்களைக் கடந்து உயிரற்ற உடம்பைப் பிரிந்து.............................................
தொல்லையற்ற தொலைதூரப் பயணம்!

- தஞ்சை த.இராமநாதன்

Thursday, 25 June 2026

சாம்பலாக மாறுவதில் மாற்றமில்லை

 


ஏமாற்றி வளத்தோடு வாழ்ந்தோரெல்லாம் பணத்தினால் மகிழ்வாக வாழ்ந்தோரில்லை
ஏமாந்து குணத்தோடு வாழ்ந்தோரெல்லாம்
மனதினால் ஏழையாக வாழ்ந்தோரில்லை

ஆடி அடங்கி பணத்திற்காக வாழ்ந்தாரின் பிணம் பார்க்க நல் மனதோடு வருவோர் நிறையபேரில்லை
ஆவி அடங்கி குணத்திற்காக வாழ்ந்தாரின் முகம் பார்க்க அழுத மனதோடு வருவோர்க்கு குறைவேயில்லை!

- தஞ்சை த.இராமநாதன்

Friday, 19 June 2026

தரம் தரும் தராதரம்

பார்க்காத பணத்தைப் பார்த்து 

உண்ணாத உணவை உண்டு                          

உடுத்தாத உடையை உடுத்திப் 

பேசாத பேச்சைப் பேசித் திரிந்தால்.....                     

தரம் தரவே தராது தராதரம்!


- தஞ்சை த.இராமநாதன்

Monday, 15 June 2026

கட்டாயம் கட்டாயத்தைக் கட்டினாலும்...

 


அப்போது...
கட்டாயப்படுத்தி வீட்டுக்கு வாங்க எனச் சொல்வார்கள்,
கட்டிப்பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் செல்வார்கள்

கட்டாயம் கட்டாயத்திலும் திண்ணையிலும் அமர வைத்து விருந்துண்ண வைப்பார்கள்,
கட்டாயம் விருந்துண்ண வருவதாகச் சொல்லி விருந்தினரை விருப்பமின்றி அனுப்பி வைப்பார்கள்!

இப்போது...
திண்ணையோடு கட்டாயத்தையும் கட்டிய வீட்டைக் காட்ட முடியுமா?
கட்டிய வீட்டைக் காட்டினாலும் விருந்தாளி வரும் வீட்டைக் காட்ட முடியுமா?

- தஞ்சை த.இராமநாதன்

Tuesday, 9 June 2026

தமிழே.... தமிழா.....

 


தமிழில் பேசத் தெரியாதவர்கள் தமிழில் பேசிப் பழிக்கின்றார்கள்
தமிழில் பேசத் தெரிந்தவர்கள் தமிழில் பேசாது அழிக்கின்றார்கள்
தாயை மதிக்கத் தெரியாதவர்கள் தாயெனத் தமிழை மதிக்கின்றார்கள்
தன்மனமும் தராதரமும் கெட்டவர்கள் தன்மான வீரமென குதிக்கின்றார்கள்!

- தஞ்சை த.இராமநாதன்

Wednesday, 3 June 2026

என் நண்பன் டாங்கே

 

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகச் சோமன்தெரு தொடக்கப் பள்ளியில் பயின்றோமே, எப்பொழுதும் ஒரே அணியில் இருந்து கபடி ஆடி ஜெயித்தோமே!

​நாக்கைக் கடித்தபடி கொதித்து ரைடு (ride) எடுத்து உதைத்து வரத் துடித்த நான் இங்கே! கையைப் பிடித்தபடி என்னை அமைதிப்படுத்தி, கபடி கபடியெனப் பாடியபடி கதறடித்த என் டாங்கே எங்கே?

​வேங்கைப் பள்ளம் வடப்பக்கம் நடு இரவில் வயலுக்கு நாம் நீர்ப் பாய்ச்சியதை நினைக்கின்றேன்; சிங்கப்பூரில் பகல் பொழுதினில் பலர் அமர்ந்திருக்கும் பகுதியில், உம் மறைவை எண்ணி அழுதபடியே இக்கவிதையை முடிக்கின்றேன்!

- தஞ்சை த.இராமநாதன்

Monday, 1 June 2026

ஆனந்தமயம்

 


ஆனந்தமயம்

பிறந்து வளர்ந்து இறக்கும்வரை புரட்சி ஓங்குக புரட்சி ஓங்குக எனச் சொல்லியே வாழ்ந்தால் புரட்சியால் எழுச்சி இல்லைதானே?

பிறந்து வளர்ந்து இருக்கும்வரை
மகிழ்ச்சி ஓங்குக மகிழ்ச்சி ஓங்குக எனச் சொல்லியே வாழ்ந்தால் மகிழ்ச்சியால் வீழ்ச்சி இல்லைதானே?

புரட்சியைப் பார்த்துச் சிரித்தும் மகிழ்ச்சியைப் பார்த்து ரசித்தும் வாழ்ந்தால் நம் வாழ்க்கை ஆனந்தமய வாழ்க்கைத்தானே?

- தஞ்சை த.இராமநாதன்