Sunday, 23 June 2024

புரியுதா? புரியவில்லையா?


புரியுதா? புரியவில்லையா?

புரிந்தவர் புரிந்தவரைப் புரிந்ததைப் புரியாதவருக்குப் புரியும்வரை புரிய வைத்தாலும் புரிந்தவருக்குப் புரிந்தது புரியாதவருக்குப் புரியுமா?

புரியாதவரிடம் புரிந்தவர் புரியும்வரை
புரியும்படி புரிந்தவற்றை புரிந்தவாறே      புரிய வைத்தாலும் புரியாதவருக்கு புரிந்தவரைப்போல் புரியுமா?

புரிந்ததால் புரிந்ததைப் புரியுமாறு
புரியாதவருக்குப் புரிய வைத்தாலும் புரியாதவர் புரியும்வரை புரியாதது புதிராகத்தான் புரியும்!

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 20 June 2024

கள்ளக்குறிச்சியில் கள்ளக்குடி

கள்ளக்குறிச்சியில் கள்ளக்குடி

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை மறைந்து குடித்து மறைந்தார்களே
நல்லக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை மறந்து குடிக்காமல் இருப்பார்களா?

குடிக்கக்கூடாதெனத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொல்லி இருக்கிறாரே
குடித்துவிட்டே திருக்குறளை உளறித் தள்ளாத தமிழர்கள் இருக்கிறார்களா?

குடித்தே குடியைக் கெடுத்தவர்கள்
துடி துடித்தே இறந்தார்களே இனி
குடியால் குடியைக் கெடுப்போர்கள்    குடியைக் குடிக்காமல் இருப்பார்களா?

குடி குடியைக் கெடுக்குமெனத் தெரிந்தே
குடித்துத் துவண்டு மாண்டார்களே இனி
குடி குடியைக் கெடுத்ததுப் போதுமென  குடித்துக் கெடுவதைத் தடுப்பார்களா?

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 19 June 2024

அவ்வாறு இவரும் இவ்வாறு அவரும்

அவ்வாறு இவரும் இவ்வாறு அவரும்

இரக்கப்பட்டதால் இறக்கப்படுவோரும் இருக்கிறார்
இறக்கப்பட்டதால் இரக்கப்படுவோரும்
இருக்கிறார்
மறுக்கப்பட்டதால் மறைக்கப்படுவோரும் இருக்கிறார்
மறைக்கப்பட்டதால் மறுக்கப்படுவோரும்  இருக்கிறார்

முடக்கப்பட்டதால் முடங்கிப்போவோரும் இருக்கிறார்
முடங்குவோரால் முடக்கப்படுவோரும்
இருக்கிறார்
அடக்கப்பட்டதால் அடங்கிப்போவோரும் இருக்கிறார்
அடங்குவோரால் அடக்கப்படுவோரும் இருக்கிறார்

கட்டுப்பட்டதால் கட்டுப்படுவோரும் இருக்கிறார்
கட்டுப்படுவோரால் கட்டுப்பட்டோரும் இருக்கிறார்
தட்டுப்பாட்டால் தட்டுத்தடுமாறுவோரும் இருக்கிறார்
தடுமாறுவோரால் தடம்மாறுவோரும் இருக்கிறார்!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 16 June 2024

என் அப்பா தர்மராஜ்


தந்தையர் தினத்தில் என் தந்தை இவ்வுலகில் இல்லாததை நினைப்பேன்
என் தந்தையே என ஏங்கும் நினைப்பில் கனத்த நெஞ்சோடு கண் நனைப்பேன்

வழியும் கண்ணீரோடு தொடரும் கனவில் எந்தை வந்து போவதைக் காண்பேன்
கனவோடு அழுதால் அப்பாவைக் காணலாமென கனவைக் காண்பேன்

அழாதடா அய்யாவென அழுகையோடு
அப்பாவின் அக்கறைக் குரல் ஒலிக்கும்
தூக்கம் கலைந்து எழுந்த கையோடு கண்கண்ட கனவு கண்ணைக் கரைக்கும்

என்னுள் எழுந்த என் அப்பாவின் நினைவை இப்பாவில் எழுதினேன் நான்
ஆம்பலாப்பட்டு தர்மராஜ் அவர்களின் மகன்தான் இராமநாதன் நான்
மஹாராஜ் & இராஜராஜ் இவர்களின் தந்தைதான் இராமநாதன் நான்!

- தஞ்சை த.இராமநாதன் (ஆம்பலாப்பட்டு தெற்கு, சோமன் தெரு)

Wednesday, 12 June 2024

படாதபாடு படுவோர்

படாதபாடு படுவோர்

படாதபாடு பட்டுப் பட்ட பாட்டால் பலன் அடைந்த பலபேர் அடைந்த பலனை அறவே மறக்கின்றார்
படாதபாடு பட்டு பயனை அடையாத சிலபேர் அடைய வேண்டிய பயனை அறவே துறக்கின்றார்

பாடாதி வாழ்வை வாழ்ந்தாலும்
பந்தா செய்து பகல் வேடமிட்டு பலபேர் பண்பற்று மானங்கெட்டு வாழ்கின்றார்
பண்பான வாழ்வால் வீழ்ந்தாலும் 
மனதில் பட்டதைப் பேசிவிட்டு சிலபேர்
பணமற்று மானத்தோடு வாழ்கின்றார்!

- தஞ்சை த இராமநாதன்

Monday, 3 June 2024

மிதி வண்டி புகட்டும் பாடம்



மிதி வண்டி புகட்டும் பாடம்

மிதித்தால்தான் ஓட்ட முடியும் என்பதால் திமிரோடு மிதிப்பதும் உண்டு
மிதி பட்டால்தான் ஓட முடியும் என்பதால் சாலைதோறும் மிதி படுவதும் உண்டு

மிதித்தவன் மிதித்துக் கொண்டே இருக்கப் போவதும் இல்லை
மிதி பட்டவன் மிதி பட்டுக்கொண்டே இறக்கப் போவதும் இல்லை

மிதிக்க மிதிக்க ஓடும் ஓட்டம் கூடி            வேகமும் அதிகரிக்கின்றது
ஓட ஓட மிதிப்பவர் மிதி வேகமும் கூடி ஓட்டமும் அதிகரிக்கின்றது

மிதித்தாலும் மிதிப்போரை மிதிக்குமாறு மதிக்கும் மிதிவண்டியை மதிப்போம்!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 2 June 2024

வதங்கினால் வாடி விடுவேன்

வதங்கினால் வாடி விடுவேன்

கூறு கெட்ட மக்களிடம் நான் கூறு கட்டி காய்களை விற்க வந்தேன்
மாடி வீட்டு மக்களிடம் கூரை வீட்டுக் காய்களை விற்க வந்தேன்

விற்று விட்டால் வியர்த்துக் கொட்டும் வியர்வையை வெறுக்க மாட்டேன்
விற்காவிடில் பொறுக்காது கொல்லும்
பசியையோ பொறுக்க மாட்டேன்

தள்ளாத வயதில் காலம் தள்ளும் வழி
நாடி பிழைக்க வந்தேன்
பொல்லாத உலகில் நானும் வாழ வழி        தேடி உழைக்க வந்தேன்

காலை மாலையென நின்றேன்
களைத்து மலைத்து அமர்ந்தேன்
வதங்காமல் வாங்கி விட்டால்
வாடாமல் வாழ்ந்து விடுவேன்!😭

- தஞ்சை த இராமநாதன்