Thursday, 27 February 2025

பாரத்தைச் சுமக்கத் தயார்

 

பாரத்தை அக்கம் பக்கம் நகர்த்தி வைக்கப் பயன்படுவது பாரம் நகர்த்தி
பாரத்தைத் தூக்கி சுத்தி உயர்த்தி வைக்கப் பயன்படுவது பாரம் தூக்கி

பாரத்தை உயர்த்தித் தூக்கித் தூக்கி
பார்ப்போரை மேலே பார்க்க வைக்குது
தூக்காதபோது ஆடாது காத்து நிற்பதோ பார்ப்போரை மேலும் வியக்க வைக்குது

ஆகா ஆகாயத்தைத் தொட்டு விடுமோ என எண்ணி அண்ணாந்துப் பார்த்து
கைப்பேசியைக் கையில் எடுத்து நகர்ந்து நகர்ந்து படம் எடுத்தால்...
கவிதை வரப்போகிறதா என்றார் பாதுகாப்பைப் பாதுகாக்கும் நபர்

தவழ்ந்து வரும் கருமேகம் ஒரு புறம்          காத்து நிற்கும் பாரம் தூக்கி மறு புறம்
கவிதையா என கேட்டது ஒரு குரல்
கவிதையே என எழுதியது ஒரு விரல்!

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 23 February 2025

எதனை? எதனால்?

 

குணம் படைத்தவரிடத்தில் பணம் இல்லாமல் போவது எதனால்?
பணம் படைத்தவரிடத்தில் குணம் இல்லாமல் போவது எதனால்?

படித்தவரிடத்தில் படித்ததற்கான எந்த தகுதியும் இல்லாதது எதனால்?
தகுதியான நபரிடத்தில் படிப்பதற்கான வாய்ப்பே இல்லாததும் எதனால்?

பேசத் தெரிந்தவரிடத்தில் அர்த்தமே இல்லாமல் இருப்பது எதனால்?
அர்த்தம் தெரிந்தவரிடத்தில் பேசத் தயக்கம் இருப்பதும் எதனால்?

லட்சம் லட்சமாய்ச் சம்பாதித்தும் லட்சியம் நிறைவேறாதது எதனால்?
ஆயிரம் பத்தாயிரமெனச் சம்பாதித்தும் பத்தாமல் பரிதவிப்பதும் எதனால்?

எதை எதனாலென எம்மாலோ                              இதை இதனாலென உம்மாலோ
அதை அதனாலென நம்மாலோ
சொல்லித் தீர்ப்பது எந்நாளோ!

- தஞ்சை த.இராமநாதன் 

Friday, 21 February 2025

உலகத் தாய்மொழி நாள்

 

உலகத்தில் இருப்போர் அனைவருக்கும் இருக்கலாம் தாய்மொழி
உலகத்தின் மொழிகளிலெல்லாம் அம்மாவாக இருப்பது தமிழ்மொழி

எந்த மொழியும் தமிழுக்கு இணையாகா என்பதை அனைவரும் அறிவோம்
இந்தி மொழி என்றும் இணையாகாது என்பதையும் அனைவரும் அறிவோம்

இந்தா இந்தா எனச் சொல்லி ஏந்தி ஏந்தி பிடித்தாலும் அலைவது வீணே
தமிழ் தமிழ் எனச் சொல்லித் தாங்கித் தாங்கிப் படித்தால் வாழ்வது தானே

எம்மொழியையும் எவரும் படிக்கட்டும் பாரினில் இன்றும் இப்போதும்
நம்மொழியை நாம் யாவரும் படிப்போம் பாரினில் என்றும் எப்போதும்!

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 16 February 2025

இறக்குமுன் எண்ணும் எண்ணம்?

 

பொன்னை எண்ணுமா? பொருளை எண்ணுமா?
மண்ணை எண்ணுமா? விண்ணை எண்ணுமா?
சொந்தத்தை எண்ணுமா? பந்தத்தை எண்ணுமா?
வாழ்ந்ததை எண்ணுமா? வாழாததை எண்ணுமா?
காதலை எண்ணுமா? சாதலை எண்ணுமா?
மோதலை எண்ணுமா? போதலை எண்ணுமா?
விட்டதை எண்ணுமா? விடாததை எண்ணுமா?
பட்டதை எண்ணுமா? படாததை எண்ணுமா?
இளம் நிலையை எண்ணுமா? கிழம்   நிலையை எண்ணுமா?
வளம் நிலையை எண்ணுமா? பழம் நிலையை எண்ணுமா?
ஏமாற்றியதை எண்ணுமா? ஏமாந்ததை எண்ணுமா?
காப்பாற்றியதை எண்ணுமா? கவுந்ததை எண்ணுமா?
எண்ணுவது எண்ணமா? எண்ணாததும் எண்ணமா?
தூங்கும்போது எண்ணமா? தூங்குவதே எண்ணமா?
எப்படியும்,
போகப் போவதும் எண்ணமே! சாகப் போவதும் திண்ணமே!

- தஞ்சை த.இராமநாதன்

Monday, 10 February 2025

கள்ளழகர் கோவில்! ஊரோ அழகர் கோவில்?

 

கல்லே அழகாகி கல்லழகர் அங்கில்லை கல்லின் அழகோடு கள்ளழகர்தான் அங்குண்டு
கள்ளழகர் கோவிலென ஊரின் பெயர் அங்கில்லை
அழகர் கோவிலென ஊரின் பெயர்தான் அங்குண்டு
அழகர் கோவில்தனில் பேரழகோடு அழகர் அங்கில்லை
அழகர் கோவில்தனில் பேரழகோடு கள்ளழகர்தான் அங்குண்டு
ஆணான கள்ளழகர் அடிவார ஆண்டவனாக அங்குண்டு
பெண்ணான ஆண்டாளும் அருள்தர ஆண்டவனோடு அங்குண்டு

மீனாட்சி அம்மன் கோயிலால் பழம் பெருமை பெற்றதும் அங்கே
கோயிலில் சங்ககால புலவர்களின் சிலையால் பலம் பெறுவதும் அங்கே
காசுப் புழங்குவது என்றென்றும் நிறையவே இருப்பது அங்கே
தூசுப் பறப்பது இன்றும் நிறையவே இருக்கிறது அங்கே
தமிழ் என ஒரு கடைத் தொகுதிக்குப் பாதிப் பெயர் இருப்பது அங்கே
தமிழ் ஷாப்பிங் மால்ஸ் என மீதிப் பகுதி பெயர் இருப்பதும் அங்கே!

- தஞ்சை த.இராமநாதன்

Thursday, 6 February 2025

சித்தப்பா சீ.தியாகராஜன் மறைந்தார்

 

பெற்றோருக்கு ஒரே ஒரு பிள்ளை
நாகம்மாள் பெற்றெடுத்த பிள்ளை      சீனிவாசன் கண்டியருக்குச் செல்லப் பிள்ளை                                                          அம்மணி & அய்யாவு மாதிராருக்குச் சின்ன மாப்பிள்ளை                                                          என் அப்பாவிற்குச் சின்னம்மா பிள்ளை      என் அம்மாவின் தங்கையை மணந்த மாப்பிள்ளை

கண்டியர் தெருவில் கங்காளர் கோவில் திருவிழா
சிறு பிள்ளைகள் எங்களுக்கு மகிழ்வின் பெருவிழா
திருவிழாவில் பலகாரம் வாங்கிக் கொடுப்பார் சித்தப்பா
மலரும் நினைவுகளைக் கண்ணீராக்கிச் செல்கிறார் சித்தப்பா!

பிறவிப் பெருங்கடல் நீந்தியது போதும் இறைவனடியில் இளைப்பாறுங்கள் சித்தப்பா!

- தஞ்சை த.இராமநாதன்

Tuesday, 4 February 2025

திருப்பரங்குன்றத்தில் சிரிக்கும் முருகா!

 

மலை மீது அமர்ந்து மண் மீது நடக்கும் கூத்தைப் பார்த்துச் சிரிக்கிறாயா முருகா?
மதம் மீது ஏறி தடம் மாறித் தள்ளாடும் பித்தைப் பார்த்துச் சிரிக்கிறாயா முருகா?

எம்மதமும் சம்மதம் எனக் கூவுவோரைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிக்கிறாயா முருகா?
என்மதமே எம்மதமும் எனக் கத்துவோரைப் பார்த்து கேவலமாய்ச் சிரிக்கிறாயா முருகா?

அரசியலெனும் மதம் பிடித்துப் போடும் ஆட்டத்தைப் பார்த்துச் சிரிக்கிறாயா முருகா?
ஆன்மீகமெனும் மதம் பிடித்துக் கூடும் கூட்டத்தைப் பார்த்துச் சிரிக்கிறாயா முருகா?

மக்களைப் பிடித்த மத போதையைத் தெளியச் செய்து சிரித்தே அருள் புரிந்திடு முருகா!

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 2 February 2025

உலகமயமெனும் மாய மயக்கம்

 

முதல் தரமோ நம்பர் 1 என்றானது
சிற்றுணவோ ஸ்நாக்ஸ் என்றானது
இனிப்போ ஸ்வீட்ஸ் என்றானது
குளிர்பானமோ கூல் டிரிங்ஸ் என்றானது
திரை அரங்கோ சினிமா தியேட்டர் என்றானது
தயாரான சிற்றுண்டி டிபன் ரெடி என்றானது
மருந்தகமோ மெடிக்கல் ஷாப் என்றானது
கல்லூரி சாலையோ காலேஜ் ரோடு என்றானது
அரவை இயந்திரமோ கிரைண்டர் என்றானது
அரிசி ஆலையோ ரைஸ் மில் என்றானது  நகர பேருந்தோ டவுன் பஸ் என்றானது    பொறியாளர் இஞ்சினியர் என்றானதும் ஆசிரியையோ டீச்சர் என்றானார்!                        

தமிழில்...
எப்படி இதெல்லாம் இப்படி ஆனது?
உலகமயமான மாய மயக்கத்தாலா?
கலாச்சார தாக்கத்தின் வீக்கத்தாலா?

- தஞ்சை த.இராமநாதன்