என் மனைவியின் அம்மா ஞானமணி
செல்வமிகு முன்சீப் குடும்பத்தின் அய்யாவு கண்டியர்-தையலம்மாள் பெற்றெடுத்த செல்ல மகள்
இருபத்தாறு வயதுக்குள் அருமையான ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்து
அம்மாடி அப்பாடியென அன்போடும் எழிலோடும் கண்ணான கண்ணாவென பிள்ளைகளைக் கொஞ்சி வளர்த்து
உற்றார் உறவினரிடத்தில் பெருமையோடு பொறாமையையும் சம்பாதித்து
பரிசுத்தமான ஆன்மாவுடன் முப்பத்தாறு வயதினிலே மரணம் அடைந்தார்
சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்து
முப்பத்தொன்பதில் ஞானம் பெற்று விவேகானந்தரின் உயிர் பிரிந்தது; பெயரிலேயே ஞானம் பெற்றவரின் உயிரோ முப்பத்தாறிலேயே பிரிந்தது
ஊரார் அழுதனர் உறவினர் அழுதனர்
கணவர் கதறினார் கண்டியர் தெருவினர் கலங்கினர்
கண்ணெதிரே கண்ட நானும் கண்ணீர் கரையும்வரை கரைந்தேன்
46 வருடங்கள் ஓடிவிட்டாலும்,
உங்களை நினைக்கும் போதெல்லாம் கண்கள் நனைவதை யாரும் பார்க்காதபடி
உள்ளத்தின் உள்ளே உருகி உங்களின் ஆன்மா இறைவனிடம் இளைப்பாறும் பயணம் தொடர்ந்து மேலோங்க தியானம் செய்து வேண்டுகின்றோம்!
- தஞ்சை த இராமநாதன்
15 March 2026 (மறு பதிவு)



