Wednesday, 25 September 2024

பழநி பஞ்சாமிர்தம்

 

பழநி பஞ்சாமிர்தம்

பேரீச்சையைத் துண்டாகத் துண்டித்து
ஏலக்காயைப்  பொடியாகப் பொடித்து
வாழைப் பழத்தை உரித்து மசித்து
திராட்சையைக் கச்சிதமாய் சேர்த்து
தேனை அளவோடு அள்ளித் தெளித்து
சர்க்கரையோடு கற்கண்டைக் கலந்து
பசைபோல் உள்ளங் கையில் வைத்து    நாவில் தவழ்ந்து அமிர்தமாய் இனித்ததும்
காதில் பழநி பஞ்சாமிர்தமென கேட்குதே!

- தஞ்சை த.இராமநாதன்

Tuesday, 24 September 2024

திருப்பதி லட்டு

 

லட்டு

தலையில் முடியை ஒட்ட மொட்டைப் போட்டு
வாயில் கிட்டப் பிடி லட்டைப் பிட்டுப் போட்டு
என்ன சுவை இதுவென வியந்ததுப் போய்
என்ன சுவை இதுவென பயந்தோமே ஓய்!

லட்டின் சொந்த கதையும் நமக்குத் தெரியாது
லட்டு இங்கு வந்த கதையும் நமக்குப் புரியாது
திருப்பதியின் சுவை லட்டை இனி கோளினி என்போம்
திருப்தியான கோளினியை இனி சுவைத்துத் தின்போம்!

- தஞ்சை த.இராமநாதன்

Wednesday, 18 September 2024

பொருளைக் கொண்டு சொல்லைச் சொல்

கூவில் அலைந்து காவில் மேய்ந்து வையை உண்டால் ஆவில் பால் சுரக்கும்
ஆவைப் பார்த்து பாவைக் கோர்த்து நாவால் இசைத்தால் பாலை ஈக்கும்

ஆவை நேயன்றி ஏ கொண்டு கொன்று ஆவின் ஊவை தீ கொண்டு கறி கண்டு  நேயற்று நா சொட்ட சுவைத்துண்போன் 
நீயெனினும் நையுற்ற கையற்றோன்

பையில் பையைத் தையல் தைத்தாலும்
நோவின் மூவில் கையால் தைத்தாலும்
தையலோ தையலெனத் தைத்த தையல் யாவும் நீளாத சேவான தூ தையல்

சோம்பேறி சோவேறி வீ கொடுத்தாலும்
நேயேறி மேயேறி காதல் பேயாகும்
தா தந்தபின் போவெனெ சொன்னாலும்
ஏவெய்த மோகம் மீவழி பொழிவாகும்

கை இழந்தால் கூவின் ஐயான கோனும்
நையாகி சீயாகி நோவடைவான்
தூவோடு வாழும் கோலின் வறியோனும்
தேயின் அருளோடு சேவடைவான்!

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 15 September 2024

நாட்டுப்புற பாடகர்

 


நாட்டுப்புற பாடகர்

அவர் பாட்டுக்கு மெட்டைப் போட்டு பாட்டைப் பாட ஆரம்பித்து விடுகின்றார்

அவர் எவரோட பாட்டுக்கும் மெட்டைப் போட்டுப் பாட ஆரம்பித்து விடுகின்றார்

அவர் அவரோட பாட்டுக்கும் மெட்டைப் போட்டுப் பாட ஆரம்பித்து விடுகின்றார்

அவரோட சந்த மனதில் மெட்டோடுப் பாட்டைப் பாடி முடித்து விடுகின்றார்

அவரோட மனதில் வந்த மெட்டோடுப் பாட்டைப் பாடி முடித்து விடுகின்றார்!

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 8 September 2024

விநாயகர் / We நாயகர்

 

விநாயகர் / We நாயகர்

விழாவின் நாயகர் விநாயகர் என்றதும் விழாவிற்கு we நாயகர் என்கிறீர்
வினை தீர்க்கும் பிள்ளையார் என்றதும்
வினை தீர்க்காத பிள்ளை யார் என்கிறீர்
கணத்திற்கு அதிபதி கணபதி என்றதும்
பணத்திற்கு அதிபதி பணபதி என்கிறீர்
அரசமரத்தடி ஆனைமுகன் என்றதும்
அரசாணைப்படி பிணைமகன் என்கிறீர்
முக்கடலில் கரைந்தார் அண்ணன் என்றதும்
முத்தமிழில் கலந்தார் தம்பி என்கிறீர்!

- தஞ்சை த.இராமநாதன்