தக்காளியின் குரல்
விளைந்திருந்தால் நடுத்தெருவில் நின்று கொட்டுகின்றீர்
விளையாதிருந்தால் கடைத்தெருவில் நின்று திட்டுகின்றீர்
விலையை உயர்த்தி வியாபாரத்தைத் திட்டம் தீட்டி பெருக்குகின்றீர்
விலையைக் குறைத்து விவசாயியைக்
கட்டம் கட்டி நொறுக்குகின்றீர்
சிவப்பாகச் செடியிலேயே பறித்து
அழுக விட்டு நாற வைக்கின்றீர்
பச்சையாகச் செடியிலேயே பறித்துப் பழுக்க விடாது தூர வைக்கின்றீர்
கிடைக்கும்போது அரிந்து அரிந்து
எண்ணெய்யில் போட்டு வதக்கின்றீர்
கிடைக்காதபோது எரிந்து எரிந்து
என்னைப் போட்டு வதைக்கின்றீர்!
- தஞ்சை த.இராமநாதன்







