திருக்குறளை மறுத்தலே சரி
திருக்குறளைப் போற்றிப் புகழாத தமிழர் புவியில் இருந்ததும் அரிது
திருவள்ளுவரைப் புகழ்ந்து பேசாத தமிழர் தரணியில் இருப்பதும் அரிது
பட்டி தொட்டியெல்லாம் வள்ளுவம் ஓங்கி ஒய்யாரமாய் ஒலிக்கின்றது
பட்டி மன்றத்திலெல்லாம் வள்ளுவரின் வாசகம் வானைப் பிளக்கின்றது
வள்ளுவரின் இரு அதிகாரங்களை அதிகமானோர் அறவே ஒதுக்குகின்றார்
ஒதுக்குவதை ஒத்துக் கொள்ளவும் மானம் வெட்கம் இல்லாது மறுக்கின்றார்
கள்ளுண்ணாமையில் (93) வள்ளுவர் மதுக் குடிப்போரைச் சாடுகின்றார்
மதுப் போட்டால்தான் நம்மாள் குறளைச் சக்கைப்போடு போடுகின்றார்
புலால் மறுத்தலில் (26) வள்ளுவர் மாமிசம் உண்போரை வெறுக்கின்றார்
நம்மவரோ குறளைப் பேசிக்கொண்டே ஆடு மாடு குரலை நறுக்கின்றார்
குடித்து குடியைக் கெடுப்போர் குறளைக் குரலில் குறைத்தலே சரி
புண்ணைத் தின்று உடலை வளர்ப்போர் குறளை மறுத்தலே சரி!
- தஞ்சை த.இராமநாதன்