Wednesday, 22 May 2024

வந்த பாதையை மறக்கின்றாய்

 

வந்த பாதையை மறக்கின்றாய்

விடாது மழை பெய்தால் ஓடோடித் தேடி
குடையை எடுத்து விடாதுப் பிடித்து பாசப் பிணைப்போடு அணைத்து மழை விட்டதும் மறந்து விடுகின்றாய்

விடாது வெயில் அடித்தால் குடையை விட்டு விடாது கையோடு அணைத்து
விரித்து எடுத்து வெயிலை மறைத்த நிழலையும் மறந்து விடுகின்றாய்

மழை முடிந்ததும் வெள்ளத்தை மறக்கின்றாய்    வெயில் முடிந்ததும் நிழலை மறக்கின்றாய் வேலை முடிந்ததும் குடையை மறக்கின்றாய்      பணம் வந்ததும் வந்த பாதையை மறக்கின்றாய்! 

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 19 May 2024

கட்டாயம்

 

கட்டாயம்

கட்டாயத்தை கடையோரம் கண்டால் கண்டவர் கட்டாயம் உட்காருவார்
கட்டாயத்தில் கண்டபடி உட்கார்ந்தால்
கண்டவரும் கட்டாயத்தில் உட்காருவார்

கட்டாயத்தைக் கட்டியவர் கட்டாயம்
கட்டாயமாகவே இருக்கக் கட்டுவார்
கட்டாயத்தைக் கட்டியவரும் கட்டாயம் கட்டாயத்தைக் கட்டாயமாகவே கட்டுவார்

கட்டாயமாகக் கட்டாயத்தில் உட்கார    கட்டாயம் யாருக்கும் கிடையாது
கட்டாயத்தோடு கட்டாயமாக உட்கார
கட்டணம் யாருக்கும் கிடையாது!

- தஞ்சை த இராமநாதன் 

Sunday, 12 May 2024

என் அன்னையை வணங்குகின்றேன்

இராமநாதனை  இராஜராஜ சோழன் பிறந்த ராசியிலே தன்னுடைய மூத்த மகனாய்ப் பெற்றெடுத்த தாயே!

கோபக்காரனென ஒருசிலர் சொன்னாலும் தன்மான இனக் குரலோனென எந்நாளும் வாழ்த்திடும் தாயே!

யாராக இருந்தாலும் எழச் சொல்லிச் சமையற் கட்டு நிலையருகே திண்ணையில் அமர வைத்து உணவளித்த தாயே!

சனிக்கிழமையிலே சூடு பறக்க மரச்செக்கு நல்லெண்ணெயைத் தேய்த்து அரப்பைச் சேர்த்து குளிக்க வைத்த தாயே!

கட்டையன் என்னோடு சண்டைப் போடையிலே குச்சி வைத்து அவனை அறிவுரித்திக் கண்டித்து என்னை அரவணைத்த அன்புத் தாயே!

இளங்காலைப் பொழுதினிலே வீட்டுக் கோழி முட்டையை உடைத்து வாயில் ஊற்றி ஓட வைத்து உடலைக் காத்த தாயே!

பதினாறு வயது முதல் பிறந்த இட வீட்டை விட்டுப் பிரிந்து வாழும் என் வாழ்க்கை ஓட்டமாய் ஓடிக்கொண்டே இருக்கின்றது என் தாயே!                                                  அவ்வோட்டத்தை சிங்காரச் சிங்கையிலும் சிங்கமாய்த் தொடர்கின்றேன் தாயே!               

கண்டியர்தெரு அம்மா வீடெனும் பெருங்குடியில் பிறந்த என் தாயே                  சோமன்தெரு காசாங்குளம் வீடெனும் குலக் குடியை வாழ வைக்கின்ற தாயே! 

அன்னையர் தினத்தில் இறையை வேண்டி உம் காலடி நோக்கி வணங்குகிறேன் தாயே!

அனைத்து அன்னையர்களுக்கும் வாழ்த்துகள்!

- தஞ்சை த.இராமநாதன் (ஆம்பலாப்பட்டு - சோமன்தெரு)               


Saturday, 11 May 2024

ஏமாற்றியவன் ஏமாந்து ஏமாறுவான்

 

ஏமாற்றியவன் ஏமாந்து ஏமாறுவான் 

ஏமாற்றியவன்தான் ஏமாறினானா?
ஏமாறத்தான் ஏமாற்றினானா?
ஏமாற்றியவனே ஏமாறியவனானா?
ஏமாந்ததால்தான் ஏமாற்றியவனானா?

ஏமாறவேதான் ஏமாற்றுகிறானா?
ஏமாற்றத்தால்தான் ஏமாற்றுகிறானா?
ஏமாறியவனையே ஏமாற்றுகிறானா?
ஏமாறியவனிடமே ஏமாற்றுகிறானா?

ஏமாந்தவன்தான் ஏமாறுகிறவனா?
ஏமாந்தவனேதான் ஏமாறியவனா?
ஏமாந்தவனால்தான் ஏமாறுகிறானா?
ஏமாறுகிறவன்தான் ஏமாறுவானா?

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 9 May 2024

தரத்தோடு தகுதி

 

தரத்தோடு தகுதி 

தகுதி இல்லாதவனுக்குத் தகுதியைத் தந்தால் தகுதியே தன் தரத்தைத் தானாகவே இழந்துவிடும்
தரம் இல்லாதவனுக்குத் தகுதியைத் தந்தாலும் தரமும் தானாகவே தன் தகுதியை இழந்துவிடும்

முயலைப் பிடிக்கும் நாயின் தகுதி முகத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும்
கயவர்களின் கள்வத்தின் மிகுதி கண்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும்

நயவஞ்சகர்களின் குள்ளநரித் தனம் நேரம் வரும்போது தானாகவே வெளிப்பட்டுவிடும்
வேடதாரிகளின் மாறுவேடத் தனம் வேடம் கலையும்போது தானாகவே வெளிப்பட்டுவிடும்!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 5 May 2024

தூங்கும் வரம் வேண்டும்

தூங்கும் வரம் வேண்டும்

உழைப்பின் களைப்போடு தூங்க முயன்றாலும் தூங்க முடியாததால் கடினமாக உழைப்பவருக்கும் ஏக்கம்
உள்ளத்தின் களைப்போடு தூங்க முயன்றாலும் தூங்க முடியாததால் கடினமாக உழைக்காதவருக்கும் ஏக்கம்

தூங்க நேரமில்லேயேயென நேரத்தைப் பார்த்துக் கொண்டே நேரத்தை ஓட்ட நினைப்பவர்களுக்கும் ஏக்கம்
நேரமிருந்தும் தூக்கமில்லையேயெனத் தூக்கத்தை நினைத்துக் கொண்டே    நேரத்தை ஓட்டுபவர்களுக்கும் ஏக்கம்

தொட்டிலில் ஆடியபடி அம்மாவின் தாலாட்டைக் கேட்டபடி ஆனந்தமாகத் தூங்கியதை நினைத்தாலும் ஏக்கம்
கட்டிலில் படுத்தபடி ஆன்மாவின்  தவிர்ப்பைக் கேட்டபடி அலங்கோலமாகத்
தூங்காததை நினைத்தாலும் ஏக்கம்

உழைக்க முடியாமல் உடுத்த முடியாமல் உண்ண முடியாமல் தளர்ந்துத் தூங்கினால் உயிரோடு முடிந்திடும் ஏக்கம்
மீண்டும் பிறந்து அம்மாவின் மடியில் அயர்ந்து தூங்குவதாகக் கனவு வந்தால் கண்ணீரோடு முடிந்திடும் தூக்கம்!

- தஞ்சை த இராமநாதன்

Friday, 3 May 2024

மொழியா? இசையா?

 

மொழியா? இசையா?

எங்கே எப்போது குயில் கூவினாலும்
கூவிய கூவலே மொழியாகிடுமா?
எங்கே எப்போது நாய் குரைத்தாலும்
குரைத்த குரைப்பே மொழியாகிடுமா?

பொங்கலுக்கு இனிப்பு சிறப்பானாலும்
அரிசி இல்லாது பொங்கல் வந்திடுமா?
மதுவை அருந்தி உயிர் வாழ்ந்தாலும்
நீர் அருந்தாத உயிர் வாழ்ந்திடுமா?

ஊறுகாயை உணவோடு உண்டாலும்
ஊறுகாயையே உணவாக உண்போமா?
தலைமுடிகள் தலைக்கு அழகானாலும்
மொட்டையானால் தலையை வெட்டுவோமா?

தப்பைத் தப்புத் தப்பாகத் தட்டி ஆடினாலும் தப்பைக் கலையத் தப்பால் முடியுமா?
விழாவைத் துவக்கத் தட்டிக் கொட்டினாலும்
மொழியால் இயம்பாது முடிப்போமா?

கங்கையில் அமர்ந்து முனகினாலும் வைகையில் திரிந்து முழங்கினாலும்
காவிரிநாடாம் இராஜராஜனின் மண்ணிலே    தமிழனின் மொழி தலைநிமிர்ந்து ஒலிக்கும்!


- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 1 May 2024

யார் தொழிலாளி? யார் முதலாளி?

பணத்தைப் பார்க்க உழைத்து வாழ்கிறார்கள் தொழிலாளிகள்
பணத்தைக் காக்க உழைக்காது வாழ்கிறார்கள் முதலாளிகள்

அரசியலால் அவதிப்பட்டு வாழ்கிறார்கள் தொழிலாளிகள்
அரசியலால் ஆதாயப்பட்டு வாழ்கிறார்கள் முதலாளிகள்

தொடர்ந்திடும் வறுமையோடு வாழ்கிறார்கள் தொழிலாளிகள்
தொடர்ந்திடும் பெருமையோடு வாழ்கிறார்கள் முதலாளிகள்

வருடாவருடம் முதலாளியிடம் ஏமாந்து வாழ்கிறார்களோ தொழிலாளர்கள்?
வருடாவருடம் தொழிலாளரை ஏமாற்றி வாழ்கிறார்களோ முதலாளிகள்?

உழைத்து வாழ்வோம்!

- தஞ்சை த.இராமநாதன்