Sunday, 31 December 2023

போகிறது 2023 வருகிறது 2024

 

போகிறது 2023 வருகிறது 2024

போன வருடத்தில் நம்மை விட்டுப் போனவரிடத்தைப் பிடிப்பதும் அரிது
சென்ற வருடத்தில் நம்மை விட்டுச் சென்றவர்களைப் படிப்பதும் அரிது

போன வருடம் எப்படிப் போனதென்றே தெரியவுமில்லை
வரும் வருடம் எப்படிப் போகுமென்று தெரிவதுமில்லை

வருடத்தைப் போக்க வருடாவருடம் வருந்தாதவருமில்லை
வருத்தத்தைப் போக்க வருடாவருடம் வணங்காதவருமில்லை

2023 வந்தபோது Happy New Year என்று சொன்னவரே அதிகம்
2023 போகும்போது Happy Year End என்று சொல்லாதவரே அதிகம் 

2023 வருடத்தை Happy Year End என்றே பின்னோக்கிச் சொல்வோம் நன்று
2024 வருடத்தை Happy New Year என்றே முன்னோக்கிச் செல்வோம் இன்று!

- தஞ்சை த இராமநாதன் 

Saturday, 30 December 2023

மரபணுவோடு கலந்ததா திருட்டு?

மரபணுவோடு கலந்ததா திருட்டு?

உப்பைத் தின்றவர் தண்ணீர் உட்கொள்வதைத் தடுக்க முடியுமா?

உதிபோல் பெருத்து வளர்ந்தாலும் உத்திரத்திற்குப் பயனாக முடியுமா?

ஏமாற்றுபவர் ஏமாற்றி ஏய்க்கும்வரை
ஏமாறப் போகிறவரை மறக்க முடியுமா? 

ஏமாறுபவர் ஏமாறி ஏமாந்தபின்
ஏமாற்றியவரை மறக்க முடியுமா?

திருடும் உள்ளம் படைத்தவரால் திருடாமல் இருக்க முடியுமா?

திருட்டு மரபணுக் குடும்பத்தில்
திருடாதோர் இருக்க முடியுமா?

எச்சில் இலை கோபுரம் அடைந்தாலும்
எதிர்காலம் தரைதான் மாற்ற முடியுமா?

எந்தநாய் ஏரியில் குடிக்கச் சென்றாலும்
ஏரியின் நீரை நக்காமல் குடிக்க முடியுமா?

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 27 December 2023

தும்மல் 25 அடிவரைக் கடக்கும்

 


தும்மல் 25 அடிவரைக் கடக்கும்

கண்டபடி கண்ட இடத்தில் அநாகரீகமாக
ஆடு தும்மலாம் - மாடு தும்மலாம்
நாய் தும்மலாம் - நரி தும்மலாம்
மனிதன் தும்மலாமா?

சாப்பாடோ சந்திப்போ அநாகரீகமாக
யானை தும்மலாம் - பூனை தும்மலாம்
கழுதைத் தும்மலாம் -  கரடி தும்மலாம்
மனிதன் தும்மலாமா?

படித்து முடித்தும் மாறவில்லை
பணத்தைப் பார்த்தும் மாறவில்லை 

நல்லவரைப் பார்த்தாவது மாறுங்கள்
தும்மும் தும்மலை மூடியவாறு தும்முங்கள்!

- தஞ்சை த இராமநாதன்


அறிவிலிகள்

 


உணர்வின்றி அறிவில்லை

எதைச் செய்ய வேண்டுமென்பதையும்
எப்போது செய்ய வேண்டுமென்பதையும்
எப்போதும் செய்யத் தவறுபவர்கள்
எப்படி வாழ்ந்தாலும் அறிவிலிகளே!

கொடி கோட்டையோடு வாழ்ந்தாலும் கோடியோடு கேடியாக வாழ்ந்தாலும்                இதயமற்ற ஈனச் செயலைச் செய்பவர்கள்    இரக்கமற்ற அறிவற்ற அறிவிலிகளே!

படித்தறிவைப் பயன்படுத்தினாலும்
பகுத்தறிவைப் பயன்படுத்தினாலும்
பாசத்தைப் பகிரப் பண்படாதவர்கள்
பாவப்பட்ட பரிதாப அறிவிலிகளே!

பொன்னைப் பெற்றுத் திரிந்தாலும்
பொருளைப் பெற்றுப் புரண்டாலும்
பெற்றோரைக் காக்கத் தெரியாதவர்கள்
பக்குவமற்ற பண்பற்ற அறிவிலிகளே!

கற்றோரைக் கவனமாகக் கவனித்தாலும்
உற்றாரை உற்சாகமாக உபசரித்தாலும்
பெற்றோரைப் பேணிப் போற்றாதவர்கள்
வாழ்ந்தும் வாழாத அறிவிலிகளே!

- தஞ்சை த இராமநாதன்

Monday, 25 December 2023

எம்மாதிரி உலகமிது?

 

எம்மாதிரி உலகமிது?

அன்பைக் கொடுத்து அரவணைத்து மன்னித்து வாழச் சொன்னாரே ஒருவர்
ஆனால் அவரை...
சிலுவையில் அறைந்து கொன்ற பிறகு போற்றிப் புகழும் உலகமே இது!

எளிய வாழ்வோடு அடிமையை அகற்றி சுதந்திரம் பெற்றுத் தந்தாரே ஒருவர்
ஆனால் அவரை...
சுட்டுத் துடிதுடிக்கக் கொன்ற பிறகு புகழ்ந்து போற்றும் உலகமே இது!

கை கொடுத்துத் தூக்கிவிட்டுக் காலூன்றி எழ வைத்து
எவரை யார் வாழ வைத்தாலும்... 
நன்றி கெட்ட நயவஞ்சக மனிதர்கள் நிறைந்த கேடு கெட்ட உலகமோ இது?

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 24 December 2023

நலமும் வளமும் வேண்டுமா?

 

நலமும் வளமும் வேண்டுமா?

பணத்தைப் பார்த்ததும் அடங்காது ஆடினால் பட்டம்போல் பறந்து வீழ்வாய்

உன்னிடம் இப்போது இருக்கும் எதுவும் எப்போதும் இருக்காது உணர்வாய்

ஆணவத்தால் அலட்சியம் கொண்டால்
கண்டபடி இகழப்பட்டு ஒழிவாய்

நீ படித்ததுதான் பெரிதென நினைத்தால் உலகளவில் நீ பூச்சியமென அறிவாய்

புகழுக்காகப் பொறாமைக் கொண்டு அலைந்தால் அலைந்தே அழிவாய்

வேண்டாததை அகற்றி வாழ்ந்தால் நலத்தோடும் வளத்தோடும் வாழ்வாய்!

- தஞ்சை த.இராமநாதன்

Wednesday, 6 December 2023

சென்னையில் மழையும் புயலும்

 

சென்னையில் மழையும் புயலும் 

நீர் உயர விளை உயர்ந்தால் அது விவசாயப் பண்ணை; நீர் உயர விலை உயர்ந்தால் அது விசித்திரச் சென்னை 

சாலையெல்லாம் சிலை இருப்பது பகுத்தறிவற்ற அரசியல் அமைப்பு; காலமெல்லாம் சாலை மிதப்பது  பக்குவமற்ற ஆட்சியின் அமைப்பு 

தலைநகராக இருக்கும் தகுதி இனிமேல் இல்லை சென்னப்ப நாயக்கரின் சென்னைக்கு; தலைநகராகும் தகுதி இனிமேல் இருப்பது இராஜராஜ சோழனின் தஞ்சைக்கு 

மழை வரும்போது மட்டும் கூக்குரல் எழுப்புவது தமிழரின் அறிவற்றச் செயல்; மழை வருமென அறிந்து உரிமைக் குரல் எழுப்புவதே தமிழரின் அறிவான செயல் 

படித்தவரும் பண்பாளரும் அரசியலுக்கு  வர மக்கள் ஆதரவு தரவேண்டும்;  கல்லாதவரும் பொல்லாதவரும் அரசியலை விட்டு விலகும் நிலை வரவேண்டும் 

சாதிக்காகக் கட்சி என்பதைத் தடை செய்ய வேண்டும்; தமிழர் யாவும் ஒரே குலமாக ஒன்றுபட்டு உயர வேண்டும் 

மும்மாரி மழை பெய்து தமிழ் நிலம் செழிக்க வேண்டும்; வெள்ளம் வந்தாலும் வடியக் கூடிய விடியல் பிறக்க வேண்டும்!

- தஞ்சை த இராமநாதன்