உணர்வின்றி அறிவில்லை
எதைச் செய்ய வேண்டுமென்பதையும்
எப்போது செய்ய வேண்டுமென்பதையும்
எப்போதும் செய்யத் தவறுபவர்கள்
எப்படி வாழ்ந்தாலும் அறிவிலிகளே!
கொடி கோட்டையோடு வாழ்ந்தாலும் கோடியோடு கேடியாக வாழ்ந்தாலும் இதயமற்ற ஈனச் செயலைச் செய்பவர்கள் இரக்கமற்ற அறிவற்ற அறிவிலிகளே!
படித்தறிவைப் பயன்படுத்தினாலும்
பகுத்தறிவைப் பயன்படுத்தினாலும்
பாசத்தைப் பகிரப் பண்படாதவர்கள்
பாவப்பட்ட பரிதாப அறிவிலிகளே!
பொன்னைப் பெற்றுத் திரிந்தாலும்
பொருளைப் பெற்றுப் புரண்டாலும்
பெற்றோரைக் காக்கத் தெரியாதவர்கள்
பக்குவமற்ற பண்பற்ற அறிவிலிகளே!
கற்றோரைக் கவனமாகக் கவனித்தாலும்
உற்றாரை உற்சாகமாக உபசரித்தாலும்
பெற்றோரைப் பேணிப் போற்றாதவர்கள்
வாழ்ந்தும் வாழாத அறிவிலிகளே!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment