ஆனந்தக் குடில்
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
அங்கே ஆடாமல் இக்குடில் நிற்கும்!
தலைக்கனம் உள்ள நம் மானிடம்
வாயிலில் தலைகுனியும் உன்னிடம்!
சாணம் கொண்டு மெழுகிய வாசல்
மாக்கோலம் கண்ட நல்வாசல்!
பாய் போட்டு நாகரீக உபசரிப்பு
வாழை இலையுடன் விருந்தளிப்பு!
இது சேய்கள் நிறைந்த இல்லம்
அன்பிற்குக் குறைவில்லா இல்லம்!
உழைத்து வாழும் நல் உள்ளங்கள்
மறைந்து போகும் பல கள்ளங்கள்!
கோடைக் கேற்ற இதமான குளிர்ச்சி
குளிரில் கதகதப்பான மகிழ்ச்சி!
காலையில் நீர் ஆகாரம் சிறப்பு
வெயிலுக்கு இளநீர் மேலும் சிறப்பு!
கூடி வாழ்ந்தால் பெருகும் வாழ்வு
கூடிப் படித்தால் விலகும் தாழ்வு!
பகிர்ந்து பசியாறும் எளிய வாழ்க்கை
தசையாடும் ஆனந்த இவ்வாழ்க்கை!
- தஞ்சை த இராமநாதன்

பழைய ஆனந்த நினைவுகள்
ReplyDelete