நினைவில் நிலைத்த சென்னை
தஞ்சையில் சோழனைப் பிடித்து திருவள்ளுவரோடு இணைந்து பயணத்தைத் தொடர்ந்து சென்னையை அடைந்து பல்லவனைப் பிடித்தேன்
அதிகாலை சைதாப்பேட்டை சத்தத்தில் சங்கமித்து 5B பயணத்தில் அடையாறு ஆலமரம் பார்த்து மந்தைவெளி கடந்து மயிலைக் குளத்தடி அடைந்தேன்
இருபத்தொரு வயதில் அன்று பார்த்த சென்னை வியக்க வைத்தது என்னை; பல மாற்றங்களோடு இன்று பார்க்கும் சென்னை வியக்க வைக்கிறது என்னை
மாமண்டூர் வந்ததும் சென்னையின் மணம் வீசும்; நெருங்கியதும் பாண்ட்ஸ் பவுடரின் மணம் வீசும்; பாடி பக்கம் போனால் பிரிட்டாணியா மணம் வீசும்
கிண்டி அண்ணா பல்கலைக் கழகம் காந்தி மண்டபம் அருகில் அமைந்தது; எனக்கு நல்ல படிப்பைக் கொடுத்து வளமான வாழ்வைத் தந்தது
எம் ஜி ஆர் இறந்ததும் கிண்டியில் இருந்து நடந்தே சென்ற காலம்; தேனாம்பேட்டையில் கலைஞர் சிலை இடிக்கப்பட்டதைப் பார்த்தக் காலம்
படித்தவுடன் மூலக்கடை கனகன் சத்திரம் பகுதியில் முதல் வேலை; அது பெரம்பூர் இளைஞர்கள் விடுதியில் தங்கி இருந்து வேலைக்குச் சென்ற வேளை
சென்ட்ரல் இரயில் நிலையம் அருகே மூர் மார்க்கெட் இருந்த இடம் பார்த்ததுண்டு; கே கே நகரில் வசித்து மரத்தடியில் கிளி ஜோசியம் பார்த்ததும் உண்டு!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment