அழுக்கை அகற்றுவோர் அப்பழுக்கற்றோர்
உவர் மண் கலவையில் ஊற வைத்து
வெள்ளாவியில் வெளுக்க வைத்து
அழுக்கை நீக்க கல்லில் துவைத்து
நீரில் நனைத்து முறுக்கிப் பிளிந்து
முறுக்குடன் துணியை அடுக்கி வைத்து
வேட்டியை நீலக் கலவையில் தொய்த்து
உதறியபின் புல்தரையில் காய வைத்து
துணிச் சுமையை கழுதை மேல் வைத்து
சாயங்காலத்தில் தன்மனை அடைந்து
கஞ்சிக் கலவையுடன் இஸ்திரி வைத்து
அழுக்கற்ற ஆடையை தூக்கிச் சுமந்து
துணியை அவரவர் வீட்டில் ஒப்படைத்து
மீண்டும் உவர் மண்ணில் ஆரம்பித்து
தூக்கத்தோடு பகல் கனவும் கலைந்து
எழுந்த வண்ணாருக்கு எண்பதானது வயது!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment