பொறுமை இழந்த பூமியின் குரல்
என்னைக் கொத்திக் கொத்தி உயிர்ப் பிழைத்தாய் ரசித்தேன் என்னைக் குத்திக் குத்தி துளையிட்டுக் குடித்தாய் ருசித்தேன்
வளர்ந்த மரத்தை வெட்டி வெட்டி அழித்தாய் பொறுத்தேன் நிமிர்ந்த மலையை உடைத்து உடைத்து தகர்த்தாய் பொறுத்தேன்
நன்செய்யை மாற்றி மாற்றி புன்செய் ஆக்கினாய் மறுத்தேன் புன்செய்யை மாற்றி மாற்றி மனையென ஆக்கினாய் மறுத்தேன்
வீட்டைக் கட்ட ஆற்று மணலை அள்ளிக் குவித்தாய் குவிந்த மணலானேன் வீட்டின் மேல் வீடென அடுக்கடுக்காய் வீட்டைக் கட்டினாய் வீடானேன்
அதிர்ந்துக் குலுங்கினால் அடியோடு அழிவீர்கள் என்பதால் தவிர்த்தேன் அழித்துதான் திருத்த வேண்டும் என்ற தத்துவத்தை தற்காலிகமாக தவிர்த்தேன்
உன்னால் என்னை உன் கையால் தூக்கிப் பிடிக்க இந்நாளும் முடியாது நான் தாக்க நினைத்தால் உன்னால் தாக்குப் பிடிக்க எந்நாளும் முடியாது!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment