ஒற்றைக் கால் வீரர்
மண் வெட்டியால் மண்ணை வெட்டினார் வெட்டிய மண்ணால் வரப்பைக் கட்டினார்
கட்டிய வரப்பால் நீரை உயர்த்தினார் உயர்த்திய நீரால் உழவைப் பெருக்கினார்
ஆழ உழுது நிலத்தை மென்மை ஆக்கினார் நிலத்தின் நீரை தெளிந்த நீர் ஆக்கினார்
தெளிந்த நீரில் தன் முகத்தையும் பார்த்தார் முளைத்த விதையின் முகத்தையும் பார்த்தார்
நீரை வடித்து காயவும் வைத்தார் காய வைத்து நீரையும் வைத்தார்
விளையும் பயிரை முளையிலே கண்டார் வளர்ந்தப் பயிரை நாற்றாய்க் கண்டார்
நாற்றைப் பறிக்க பக்குவம் கொண்டார் பிரித்துப் பயிரை நடும் பக்குவமும் கொண்டார்
வளர்ந்தப் பயிரில் கதிர் வரச் செய்தார் விளைந்த நெல்லில் சோறு வரச் செய்தார்
இவர் ஒற்றைக்காலில் நின்றே வென்றார் இவர் நாற்றங்காலில் வென்றே நின்றார்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment