பாரதியைக் கேட்கின்றேன்
ஐந்தில் அன்னையை இழந்து அழுது துடித்தீரா சுப்பிரமணியனாகிய சுப்பையா எனும் என் பாரதி?
ஏழில் தந்தையின் மறுமணத்தைப் பார்த்து என் அன்னை எங்கே என எண்ணித் துடித்தீரா என் பாரதி?
பதினொன்றில் புலவர் சபையில் கவியாகி கலைமகனாகி பாரதியாகி பாரதியாவீரென நினைத்தது உண்டா என் பாரதி?
ஈரேழில் ஏழு வயது செல்லம்மாளை கை பிடித்த அந்நாளில் இழந்த உம் செல்ல அம்மாவின் அரவணைப்பை மீண்டும் பெற்றீரா என் பாரதி?
ஈரெட்டில் தன் தந்தையைப் பறி கொடுத்து பரிதவித்து செய்வதறியாது துவண்டீரா என் பாரதி?
தொடர் தவத்தை இருபான் வரை தன் வடகாசி அத்தையார் வீட்டினில் தொடர்ந்தீரோ என் பாரதி?
தலைப்பாகை அணிந்து மீசையோடு தமிழ் மண் திரும்பி பிடிக்காத வேலயிடையே தனிமை இரக்கத்தை விவேகபானுவாக வெளியிட்டீரோ என் பாரதி?
இருபதில் ஆரம்பித்து பதினொன்பது வருடங்கள் எழுத்தால் புரட்சித் தீயை பரவ செய்து அதற்குப் பரிசாக வயிறு பட்டினியில் வாடியதோ என் வைர பாரதி?
பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகளுக்கு பயந்து பதுங்கி அல்ல துணிந்து ஒதுங்கி தமிழ்ப் பரம்பரையை வாழ வைக்க வதைப் பட்டீரோ என் பாரதி?
இருக்கும் போது இரக்கமற்று இறக்க விட்டு இறந்த போதும் பத்துபேர் கூட கூடாத சுயநலக் கூட்டத்தை மன்னிப்பீரா என் பாரதி? 😢😭
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment